முன்பதிவில் சலுகை – தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு

ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகைகள் வழங்கியதன் மூலம் 2016 முதல் 2019 வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், மாணவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணச் சலுகை வழங்க உத்தரவிடக்கோரி திருச்சியை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தெற்கு ரயில்வே சார்பில் வர்த்தகப் பிரிவு துணை பொதுமேலாளர் சுந்தர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 50 பிரிவினருக்கு 10 முதல் 100% வரை கட்டணச் சலுகை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா பேரிடர் காரணமாக, மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலும், பயணிகளின் தேவையற்ற பயணங்களை ஊக்குவிக்கக்கூடாது என்ற வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 4 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், 11 வகையான நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே கட்டணச் சலுகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதோடு, ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் எந்த வித சிக்கலும் இல்லாமல் பல நோயாளிகள் கட்டண சலுகைகளை பெற்றுள்ளனர் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கட்டணச் சலுகைகள் வழங்கியதன் மூலம், 2016 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தெற்கு ரயில்வேக்கு சுமார் 5,475 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

Exit mobile version