3-வது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்க அணி

ராஞ்சி டெஸ்டில் பாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்க அணி, 2-வது இன்னிங்சிலும் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 9 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது. இந்தநிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு சுருண்டது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமி, ஜடேஜா, நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து பாலோ ஆன் கொடுக்கப்பட்டு 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா, ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 132 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, டி ப்ரன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். லிண்டே 27 ரன்களும், பீடெட் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version