டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தல்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ரன்களை குவித்து வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்து வரும் இந்தியா, முதல் நாளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 117 ரன்களுடனும், ரகானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், ரகானே மேற்கொண்டு 17 ரன்கள் சேர்த்து தனது 11-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ரகானே 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். 250 பந்துகளில் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சசத்தையும் பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 255 பந்துகளில் 28 பவுண்டரி 6 சிக்சருடன் 212 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரை 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 375 ரன்களுக்கு மேல் எடுத்து தொடர்ந்து நிதானமாக ஆடி வருகிறது.

Exit mobile version