மயிலாடுதுறையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

மயிலாடுதுறை பகுதியில் 7 மாதங்களாக தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கடந்த 7 மாத காலமாக, தனியாக நிற்பவர்களை நோட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்து, கைப்பை, செல்போன்களை பறித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனையடுத்து, வழிபறி சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மயிலாடுதுறை அடுத்த மணக்குடி பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை கும்பலை, தனிப்படை, உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வழிபறி கொள்ளையர்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version