பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையை, கடத்திச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காளியாபுரம் அருகே உள்ள நரிகள் பதி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலன். இவரது மனைவி தேவிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத பெண் தேவியிடம் பழகி குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தேவியை டிஸ்சார்ஜ் செய்தபோது குழந்தையின் தந்தை பாலன் மருந்து வாங்குவதற்காக சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து குழந்தையை கையில் வைத்திருந்த பெண் திடீரென மாயமானார். இதனால் பதறிய தம்பதியினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கண்காணிப்பு கேமிராக்களை வைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த பெண் ஆட்டோவில் ஏறிச்செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.