வரும் 31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் – சிவசேனாவிற்கு பாஜக தலைவர் அமித்ஷா கெடு

31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசில் சிவசேனா அங்கம் வகித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை இருகட்சிகளும் இணைந்தே எதிர்கொண்டன.ஆனால் சமீப காலங்களில் பாஜகவின் பல்வேறு செயல்பாடுகளை சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அக்கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து சிவசேனா முடிவை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மகாராஷ்டிர எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Exit mobile version