இந்தியா- அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

இந்தியா- அமெரிக்கா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர். அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப்புக்கு பிரதமர் மோடி உற்சாக வரவேற்பை அளித்தார். இதன்பிறகு, பிரதமர் மோடியுடன் டிரம்ப் தம்பதியினர் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர்அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு சென்ற டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் பிரதமர் மோடியும், டிரம்பும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். நமஸ்தே எனக் கூறி தனது உரையைத் தொடங்கிய டிரம்ப், இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைப்பதாக கூறினார்.

பின்னர் தாஜ்மஹாலை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் சுற்றிப்பார்த்தனர். தாஜ்மஹாலின் பெருமை குறித்தும், வரலாற்றுச் சிறப்புகள் குறித்தும் மொழிபெயர்ப்பாளார்கள் விளக்கி கூறினர்.இதையடுத்து ஆக்ராவில் இருந்து தனது பிரத்யேக விமானம் மூலம் டெல்லி சென்ற டிரம்பை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வரவேற்றார். அங்கிருந்து டிரம்ப் ஐடிசி மெளர்யா ஹோட்டலுக்குச் சென்றார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அதிபர் டிரம்ப், 11 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதையடுத்து இந்தியா – அமெரிக்கா இடையே 21 ஆயிரத்து 606 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவுள்ளதாக தெரிகிறது.  இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கும் டிரம்ப், இரவு 10 மணிக்கு அமெரிக்கா திரும்புகிறார்.

Exit mobile version