தமிழகத்தின் அவமான சின்னம் ஆ.ராசா – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

2ஜி இமாலய ஊழல் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே அவமான சின்னம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2ஜி ஊழல் மேல் முறையீட்டு வழக்கில் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், தேவையற்ற கருத்துகளை ஆ.ராசா பேசுவதாக கூறினார். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் 2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழகத்தின் அவமான சின்னமாக திமுக இருப்பதாகவும் விமர்சித்தார்.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தால், திமுக தலைவர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவர்கள் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்திய ஆ.ராசாவின் கடந்த கால வாழ்க்கை வெளியுலகிற்கு கொண்டு வரும் நிலையை அவர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளதாகவும், திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு துறையில் விருது பெற்றுள்ளதா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version