செங்கல்பட்டு மற்றும் தென்காசிக்கு தனி சிறப்பு அதிகாரிகள் நியமனம்

புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மற்றும் தென்காசிக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவுட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தனி மாவட்டங்களாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 2 மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் வரை அந்தந்த மாவட்ட வருவாய் நிர்வாக ஆணையர்களோடு இவர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்றும், புதிய மாவட்டங்களுக்கான எல்லைகளை பிரிக்கும் பணியில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version