மாட்டு சேகரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரம்

கட்டிய மனைவியை மிரட்டி வந்த ரவுடியின் வீட்டில் இருந்து துப்பக்கி மற்றும் பட்டா கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை பெரவள்ளூரை சேர்ந்த பிரபல ரவுடி மாட்டு சேகர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை எண்கவுன்டர் செய்ய காவல்துறையினர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், திருந்தி வாழ்வதாக ஆந்திராவில் வசித்து வந்தார். இதனிடையே மாட்டு சேகரின் மனைவியும், பெண் வழக்கறிஞருமான அணுராதா, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தானும், தன் கணவரும் பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ள அவர், கணவர் தன்னை அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாட்டு சேகரை பிடிக்க பெரவள்ளூருக்கு காவல்துறையினர் சென்ற போது தலைமறைவானதாக தெரிகிறது. வீட்டை சோதனை செய்த காவல்துறையினர், ஒரு கைதுப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், 2 பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மாட்டு சேகர் கூட்டாளிகளான ஜனார்த்தனன், பாலாஜி ஆகிய இருவரையும் காஞ்சிபுரத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி மாட்டு சேகரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாட்டு சேகர் துப்பாக்கி யாரிடம் இருந்து வாங்கியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version