செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ மையம்: எடப்பாடி அடிக்கல்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 96 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கட்டடங்களைத் தொடங்கி வைத்தார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க 10 கோடி ரூபாய் மதிப்பில் பெட் சி.டி. ஸ்கேன் மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருப்பூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலச் சிறப்பு மையக் கட்டடம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவையும் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஓசூர் மருத்துவமனையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் தலா 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை மையங்களைத் திறந்து வைத்தார்.

நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையக் கட்டடங்கள், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் மணம்தவிழ்ந்தபுத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டம் சிட்லிங் மற்றும் முத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம், தேனி மாவட்டம் குச்சனூர், திருச்சி மாவட்டம் ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரிவு கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கரில், 96 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மருத்துவப் பணியாளர் மையத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Exit mobile version