கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் திறக்கப்பட உள்ள பள்ளிகள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால் இதனை பள்ளிக்கல்வித்துறை மறுத்தது.

ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்தநிலையில் திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது.

Exit mobile version