சபரிமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சபரிமலை கோயில் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் உள்ள ஐதீகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்தனர். சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version