உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், 133 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உச்ச நீதிமன்றம் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடமுடியாமல், உரிய நேரத்தில் நீதி கிடைக்காமல் போவதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளே உள்ளதாகவும், அதன் காரணமாக வழக்குகளை விரைந்து முடிக்கமுடியவில்லை எனவும் கூறினார். இதனால், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அனைத்து மாநிலங்களிலும் அமைக்க கோரினார். மேலும் தமிழகத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், மதுரையில் வணிக ரீதியான விமான சேவையை தொடங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version