சந்தியாவின் உடல் உறுப்புகள் பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவு…

கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சந்தியாவின் இரண்டு கால்கள் மற்றும் வலது கை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி கிடைத்தது. அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஈக்காட்டுத்தாங்கல் கூவம் பகுதியில் கொலையாளி பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய இடத்தில் முட்டிக்கு மேலே இடுப்புக்கு கீழே உள்ள பகுதி கண்டெடுக்கப்பட்டது.

இடுப்புக்கு மேலே இடது கையோடு கூடிய தலைப்பாகத்தை பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தனிப்படை போலீசார் தீவிரமாக பல நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள அந்த உடல் பாகங்களை பெற்றோர் கேட்பதனால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள சந்தியாவின் உடலைப் பெற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பள்ளிக்கரணை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருக்கக்கூடிய கிராமத்தில் சந்தியாவுக்கு இறுதி சடங்கு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version