மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து

சேலம் மாவட்டத்தில், மழை காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அம்மாபேட்டை காவல் நிலையம் பின்புறம் உள்ள தெருவில், ஆட்டோ ஓட்டுனரான கண்ணன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். மழை காரணமாக இவரது வீட்டின் மண்சுவர் சேதமடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்துபோது, சுவரில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை பலத்த சத்தத்துடன் சரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன், உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றியதால், 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version