சாதிக் பாட்சா மனைவி ரேகா பானு குடியரசுத் தலைவரிடம் புகார் மனு

சாதிக் பாட்சா மரணத்தில் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும் என சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானு குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா, சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில், சாதிக் பாஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார். இந்த நிலையில், 2011 மார்ச் 16ல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு சாதிக் பாஷா தற்கொலை கொண்டார்.

இந்நிலையில், சாதிக் பாட்சாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 16ம் தேதி, “கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே” என்றும், இப்படிக்கு உன் முகம் கூட அறிந்திடா உன் பிள்ளைகள் என்றும் நாளிதழ்களில் அவரது குடும்பத்தினர் விளம்பரம் செய்தனர். திமுகவில், அதுவும் ஆ.ராசாவின் நண்பராக இருந்த சாதிக் பாஷா, அந்த நட்பின் காரணமாகவே உயிரைவிட்டது போல், அவருடைய குடும்பத்தினர் கூறியிருந்தனர்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த திமுகவினர், சாதிக் பாஷாவின் மனைவி சென்ற கார் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ரேகா பானு புகார் அளித்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், சாதிக் பாட்சா மனைவி ரேகா பானு இன்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில் 2 ஜி விவகாரத்தில், தனது கணவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம், அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Exit mobile version