ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

கொரோனவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில், சென்னை மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று உறுதிப்பட தெரிவித்தார். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து பிரதமரை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொற்று பரவல் அதிகம் உள்ள நிலையில், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா பேசியதாக ஆடியோ வெளியிடப்படுவதாக தெரிவித்தார். அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா ஏற்கனவே அறிக்கை வாயிலாக அறிவித்து விட்ட நிலையில், அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிப்படுத்தினார்.

Exit mobile version