டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்த ரூ.67.24 கோடி நிதி ஒதுக்கீடு

காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதால், மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் நலனுக்காக, மாநிலம் முழுவதும் மக்களின் பங்கேற்புடன் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக நீர் ஆதாரங்களை பாதுகாக்க நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன. டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தை செயல்படுத்த 67 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில், 809 இயந்திரங்கள் உதவியுடன், நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளும், பிற மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளும் நடைபெறுகின்றன. 173 பொறியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம் காரணமாக, 10 நாட்களில் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்லும் என்பதால், டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதற்காக, விவசாயிகள் தமிழக அரசுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version