பாசன வேளாண்மையை நவீனப்படுத்த ரூ.650 கோடி ஒதுக்கி, அரசாணை வெளியீடு

பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக, சுமார் 650 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுப்பணித் துறையின் கீழ், 16 அணைக்கட்டு பகுதிகளில், நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டு, நீர் பாதைகள் உள்ளிட்டவைகளை நவீனப்படுத்தும் வகையிலான 57 திட்டங்களுக்காக, 649 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில், நந்தியார் அணைக்கட்டு பகுதியில், 4 திட்டங்களுக்காக, 8 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், கீழ் பெண்ணையார் அணைக்கட்டு பகுதியில் 4 திட்டங்களுக்காக, 43 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயும், பாம்பாறு அணைக்கட்டு பகுதியில் 4 திட்டங்களுக்காக 15 கோடியே 16 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், வாணியாறு அணைக்கட்டு பகுதியில் 3 திட்டங்களுக்காக, 17 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், கீழ் கொள்ளிடம் அணைக்கட்டு பகுதிக்கு 213 கோடியே 89 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில், மேட்டூர் முதல் நொய்யல் படுகையில் 5 திட்டங்களுக்காக 75 கோடியே 94 லட்சம் ரூபாயும், திருமணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் 3 திட்டங்களுக்காக 27 கோடியே 74 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், அய்யார் அணைக்கட்டு பகுதியில் 4 திட்டங்களுக்காக 22 கோடியே 57 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும், நந்தியார் அணைக்கட்டு பகுதியில் 4 திட்டங்களுக்காக 32 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில், பச்சையாறு அணைக்கட்டு பகுதியில் 3 திட்டங்களுக்காக 5 கோடியே 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தாமிரபரணி படுகைக்குட்பட்ட சித்தாறு அணைக்கட்டு பகுதியில் 2 திட்டங்களுக்காக 43 கோடியே 59 லட்சம் ரூபாயும், உப்பாறு அணைக்கட்டு பகுதியில் 3 திட்டங்களுக்காக 110 கோடியே 86 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும் என மேலும் பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்காக சுமார் 650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version