காஷ்மீரில் ரூ.250 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு கடத்தப்பட இருந்த 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போதை தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இருந்து வடக்கு டெல்லியின் ஆசாத்பூர் மண்டிக்கு சென்றுக் கொண்டிருந்த டிரக்கை சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சோதனை மேற்கொண்டபோது, அதில் ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

50 கிலோ எடை கொண்ட, ஹெராயின் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 250 கோடி ரூபாய் என்று போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து டிரக்கை ஓட்டிவந்த ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கடத்தலில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version