ரூ.1,885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே விளக்கம்!

நாடு முழுவதும் ரயில் பயண முன்பதிவுகளை ரத்து செய்த பயணிகளுக்கு, இதுவரை ஆயிரத்து 885 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால், முன்பதிவு செய்த பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்த பயணிகளின் பணத்தை திருப்பி கொடுக்க அட்டவணை தயார் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் முன்பதிவை ரத்து செய்த பயணிகளுக்கு, மொத்தம் ஆயிரத்து 885 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 21ம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை முன்பதிவை ரத்த செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Exit mobile version