ஏடிஎம்மில் கிருமி நாசினி தெளிப்பது போல் ரூ.13 லட்சம் கொள்ளை!

சென்னையில், ஏ.டி.எம்மில் கிருமி நாசினி தெளிப்பது போல் வந்த நபர், நூதன முறையில் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று, இந்த ஏடிஎம் மையத்தின் காவலாளி வெளியே அமர்ந்திருந்த நிலையில், உள்ளே ஒருவர் பணம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பையுடன் வந்த மர்ம நபர், ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்கவேண்டும் என கூறி மையத்திற்குள் சென்றுள்ளார். அப்போது உள்ளே இருந்தவர், தான் எடுத்த பணத்தை ஓரமாக நின்று எண்ணிக்கொண்டிருந்தார். வந்த நபர், ஏடிஎம் எந்திரத்தில் சாவியை போட்டு திறந்து, பணத்தை எடுத்து பைக்குள் போட்டு கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பணத்தை எடுத்து கொண்டு ஆட்டோவில் ஏறி சென்று விட்டார். இதையடுத்து அருகில் இருந்த நபர், காவலாளியிடம், வந்த நபர் பை நிறைய பணம் எடுத்து செல்வதாகவும், வங்கி ஊழியர் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த காவலாளி வங்கி மானேஜருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version