போரூர் ஏடிஎம்மில் பணம் நிரப்பியவர்களை மிரட்டி ரூ.10 லட்சம் கொள்ளை

போரூர் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களை கத்தியால் கிழித்து 10 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் தேவராஜ், முரளி ஆகியோர் 35 லட்சம் ரூபாயை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பி வந்துள்ளனர்.

இறுதியாக 14 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு போரூர் மூவேந்தர் நகரில் உள்ள வங்கி ஏடிஎம்-ல் இருவரும் நிரப்பியுள்ளனர். அப்போது, தலையில் ஹெல்மெட்டுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், இருவரையும் மிரட்டியுள்ளனர். தேவராஜ் கையில் கத்தியால் கிழித்த மர்ம நாபர்கள், 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாமல் தேவராஜ், முரளி ஆகியோர் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.

எனவே, கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Exit mobile version