ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே  ஏ.டி.எம் வாகனத்தில் இருந்த ரூ.1 கோடியே 60 லட்சம் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஏ.டி.எம் வாகனத்தில் கொண்டு சென்ற ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மலட்டாறு முக்குரோட்டில், ஏ.டி.எம் மில் பணம் நிரப்பும் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும்,
அதிலிருந்து, 1கோடியே,60 லட்சம் பணம் மாயமானதாகவும் வாகனத்தில் வந்த ஊழியர்கள் சாயல்குடி போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர்.நேற்று மாலை 3 மணி அளவில் 1கோடியே 85 லட்சம் ரூபாய் பணத்துடன் கிளம்பிய இந்த வாகனம் ராமநாதபுரத்தில் இரண்டு ஏ.டி.எம் சென்டர்களிலும்,
கீழக்கரையில் ஒரு சென்டரிலும் பணத்தை நிரப்பிவிட்டு, சாயல்குடிக்கு வந்துள்ளது. அங்கு பணத்தை நிரப்பிவிட்டு முதுகுளத்தூர் போகும்போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சாயல்குடி போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை ஜேசிபி உதவியுடன் மீட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, வாகனத்தில் வந்த குருபாண்டி, அன்பு,வீரபாண்டி மற்றும் கபிலன் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரிடமும் தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

Exit mobile version