ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து திருட்டு : காவலாளி போல் நடித்து மோசடி

பழனியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து, பெண்களிடம் பணம் திருடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த கீதா என்ற பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து சனிக்கிழமை அன்று ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருக்கிறது.

விசாரணையில், அந்த பெண் பழனி தபால் நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்தில் காவலாளி போல் இருந்த நபர் ஒருவர், அவருக்கு உதவி செய்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் ஏ.டி.எம் அட்டையை வாங்கி பாஸ்வேர்ட்டை அறிந்த அந்த நபர், வேறொரு ஏடிஎம் அட்டையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

அந்த பெண் சென்றதும், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் திருடப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பழனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version