தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்!

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னையில் 6ஆவது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளதால் பால்நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

கடலூரில் 4வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிபுலியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூரின்  நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, நகைக்கடை தெரு, பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, ஆகிய பிரதான சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

தஞ்சையில் கீழ ராஜ வீதி, அண்ணா சாலை, ரயிலடி, ஆபிரஹாம் பண்டிதர் சாலை ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் தீவிரம் புரியாமல் அரண்மனை விளையாட்டு மைதானத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் டிரோன் கேமிராவில் பதிவாகின.

ஈரோடு மாவட்டத்தில் 135க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைப் பகுதிகளைக் கடப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகரத்தின் முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்சி மாநகரில் உள்ள மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கே.கே. நகர், தில்லை நகர், பெரியக்கடை வீதி, மலைக்கோட்டை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க 1500 காவலர்களும், 500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

நீலகிரி மாவட்டம் உதகையில் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளித்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 14 சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி, உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கையொட்டி பால் நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ராமநாதபுரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பேருந்து நிலைய பகுதி, கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பால்நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Exit mobile version