மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று!

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து விட்டதாக கருதிய நிலையில், 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது.

இதனால், கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ராஜேஷ் பூஷண் தலைமை வகித்த இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிர, ஒடிசா, அசாம், மிசோரம், மேகலாயா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது 10 மாநிலங்களில் 80 சதவீத பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதால், தொற்று பரவுவதாக கூறப்படுகிறது.

10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதம் இருப்பதால், அங்கு ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version