தோனியை காட்டிலும் ரிஷப் பந்த் மாறுபட்ட வீரர்: லாரா

எம்.எஸ்.தோனியை விட ரிஷப் பந்த் முற்றிலும் மாறுபட்ட வீரர் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா கூறியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த். 21 வயதான அவர், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக டி20 போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் விளையாடி வருகிறார். சமீபத்தில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டி கொண்ட இருபது ஓவர் தொடரில் மொத்தமாக 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டியிலும் விளையாடிய பந்த் 23 ரன்களும் எடுத்தார். பேட்டிங் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பர் பணியிலும் மோசமாக சொதப்பியதால் ரிஷப் பந்த் கடும் நெருக்கடிக்குள்ளாகினார். இதனால் அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடி வரும் ரிஷப் பந்த், முதல் டி20 போட்டியில் 18 ரன்களும், இரண்டாவது டி20 போட்டியில் 33 ரன்களும் எடுத்தார்.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை அணியில் தனது இடத்தை தக்க வைப்பதற்கு ரிஷப் பந்த் போராடி வரும் வேளையில், அவர் களத்தில் விளையாடும் போது ரசிகர்கள் தோனி… தோனி என கூச்சலிடுவதால் அவர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார். இதனால் பல வீரர்கள் ரிசப் பந்த்-ற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரிஷப் பந்த்துக்கு மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாராவும் ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பந்த் பெரும் உற்சாகத்தை உருவாக்கியே பிறகே அணிக்கு வந்துள்ளார். மிகுந்த ஆக்ரோஷம் அவரிடம் இருக்கிறது. தோனிக்கு பதிலாக பண்டை விளையாட வைக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், எம்.எஸ்.தோனியை விட முற்றிலும் மாறுப்பட்ட வீரர் ரிஷப் பந்த். அவர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், டி20 உலக கோப்பைக்கு 8 அல்லது 9 மாதங்களே இருப்பது எனக்கு தெரியும். இந்த குறுகிய இடைவெளியில் மற்றொரு விக்கெட் கீப்பருடன் செல்ல இருக்கும் நேரத்தில் ரிஷப் பந்த் மீது அதிக அழுத்தம் தேவையற்றது என்று தெரிவித்தார்.

Exit mobile version