முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு ஆவணப்படம் மூலம், தனது பெயர் மற்றும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூ சாமுவேல் அவதூறுகளை பரப்பி வருவதாக கூறி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றம், முதலமைச்சர் குறித்து ஆதாரமின்றி ஊடகங்களில் பேசவும், ஆவணங்களை வெளியிடவும் கூடாது என மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மேத்யூ உள்ளிட்ட 7பேர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

அதேபோல சயனுக்கு நோட்டீஸ் சென்றடையாததால், வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி, முதலமைச்சர் குறித்து பேசவும் எழுதவும் விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

Exit mobile version