கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய நபரை, அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் சிகிச்சை பெற்றுவந்த பழனி அண்ணாநகரை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், சிகிச்சை முடிந்து மீண்டும் பழனிக்கு திரும்பினார். இதுகுறித்து தகவலறிந்து அண்ணாநகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்ட நபரை அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மருத்துவர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Exit mobile version