கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 900 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 7 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரத்து 900 கனஅடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் தாக்கம் குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5 ஆயிரத்து 900 கனஅடியாக குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று நீர்வரத்து 7 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரத்து 900 கன அடியாக குறைந்துள்ளது.ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 123-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version