சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட்

சென்னை விமான நிலையத்திற்கு ”ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டதை தொடர்ந்து, விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் சக்தி வாய்ந்த வெடிக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியரசு தின விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version