ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தும் ஆளுநரும், மத்திய அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்போது 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் இந்த விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில், இன்றுடன் 100 நாட்கள் முடிவடைந்தது என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, அமைச்சரவை பரிந்துரைத்தது, ஆளுநர் மவுனம் ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்று கூறியுள்ள அவர், ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ, நீதி வெல்வதெப்போ என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version