ரஜினியை பார்க்கவைப்பதாக கூறி பல லட்சம் மோசடி

ரஜினியின் தீவிர ரசிகர்களை குறிவைத்து ரஜினி பழனி என்பவர் லட்சக்கணக்கில் மோசடி செய்துவருவதாக, பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி பெங்களூருவில் வசித்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகையான இவர் தனது கைகளில் ரஜினியின் பெயர் மற்றும் படத்தினை பச்சைக்குத்தி வைத்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் ரஜினி பழனி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர் தாங்கள் ரஜினியின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும், ரஜினியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி நேரில் சென்ற போது, ஏடிஎம் கார்டு மூலம் அவரிடமிருந்து ஒன்றரை லட்சம் பணத்தை ரஜினி பழனி பறித்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழ்ச்செல்வி பேஸ்புக்கில் ரஜினி பழனி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினி பழனி , தமிழ்ச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்செல்வி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினி பழனி ரஜினி ரசிகன் என்று சொல்லி கொண்டு ரஜினி ரசிகர்களை இணைத்து பல லட்ச ருபாய் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று, ரஜினியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் குருப் ஆரம்பித்து ரஜினி 30-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டும் தமிழ்செல்வி, இதுபோன்று ரஜினியின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version