போராடித் தோற்ற சென்னை – 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

இன்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 4வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்.2020 தொடரின் 4வது போட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே, சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 6 ரன்களில் ஜெய்ஸ்வால் அவுட்டாக, ஸ்மித்துடன், சஞ்சு சாம்சன் இணைந்தார். இந்த இணை சென்ன அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. 19 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட அரைசதம் விளாசினார் சாம்சன். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த இணை, 44 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தது.

32 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹரிடம் கேட்ச் கொடுத்து சஞ்சு சாம்சன் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மித் 34 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள், அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஆர்ச்சர், அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 27 ரன்களை விளாசினார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆர்ச்சர் 27 ரன்களுடனும், டாம் 10 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 9 பவுண்டரிகளையும், 17 சிக்ஸர்களையும் விளாசியது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லா, நிகிடி ஆகியோர் 4 ஓவர்கள் பந்து வீசி முறையே 55 மற்றும் 56 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக விளையாடத்தொடங்கிய இந்த இணையை ராகுல் பிரித்தார். 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் விளாசிய வாட்சன் அவுட்டானார். வழக்கம் போலவே விஜயும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாமல் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். டு ப்ளெஸிஸ் மட்டும் கடந்த போட்டியை போலவே அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 55 ரன்களை விளாசினார். தொடர்ந்து விளையாடிய டூ ப்ளெஸிஸ் 37 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் உள்பட 72 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி 3 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசினார். எனினும், சென்னை அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் அணி தரப்பில், ராகுல் திவாட்டியா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், டாம் கர்ரண் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

32 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 74 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐ.பி.எல். 2020 தொடரின் 5வது போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version