அரசிடம் தமிழ் தேசிய அமைப்பு கோரும் விஷயம் நடக்காத காரியம் : ராஜபக்சே

இலங்கையில் ஐக்கிய முன்னணி தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வரும் புதிய அரசியலமைப்பு விஷயம் என்பது நடக்காத காரியம் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில், அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரும் அரசிற்கு எதிராக கருப்பு பட்டைகளை கைகளில் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாநாட்டில் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தனது ஆட்சிக்காலத்தில் நீதிமன்றக் கட்டமைப்பு எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாததாக இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் கடந்த ஆட்சி காலங்களில் நீதிமன்றக் கூட்டமைப்பில் அரசியல் அழுத்தங்கள் இருந்ததாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்வைத்த குற்றச்சாட்டை ராஜபக்சே நிராகரித்தார்.

தமிழர்களை ஏமாற்றி வரும் ரணில் அரசை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து காப்பாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தனியான அரசாங்கம் பற்றி கூறி வரும் அரசு அதனை 4 ஆண்டுகளாக கூறி வருவதாகவும், அதனை உருவாக்கவில்லை எனவும், இது நடக்காத விஷயம் என விமர்சனம் தெரிவித்தார்.

Exit mobile version