ஜனநாயகத்தை ஏற்படுத்த பொதுத்தேர்தலே வழி – முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச

ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு பொதுத்தேர்தலே ஒரே வழியென, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஜனநாயகமும் பொதுத்தேர்தல்களும் என்ற அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்தில் தான் உள்ளதே தவிர நாடாளுமன்றத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.

மக்கள் தங்கள் இறைமையை வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை இலங்கையில் மட்டும்தான் காணமுடிகிறது என்று கூறியுள்ளார்.

ஆறு மாகாண சபைகள் இயங்காத நிலையில் காணப்படுவதை சுட்டிக் காட்டியுள்ள அவர்,  தேர்தல்களை கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கம் நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Exit mobile version