கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழை பதிவானது. இந்த மழை சீசனில் முதல் முறையாக பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும். இதனால் மணிமுத்தாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 86.10 அடியில் இருந்து 93.80 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 102 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல பாபநாசம் அணை நீர்மட்டமும் இரண்டு நாளில் 8 அடி உயர்ந்து 114.70 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 607 கனஅடி நீர் வரத்து உள்ளது.மழை காரணமாக கடனா நதி,ராம நதி அணை, கருப்பா நதி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இது போல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கன மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Exit mobile version