நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் மோடி தவறிவிட்டார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் புதுச்சேரி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய போது, பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், நடுத்தர வர்க்கத்திடமிருந்து வரி வசூலிப்பதில் தீவிரமாக இருக்கும் அரசு, ஏன் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என கேட்டிருந்தார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத பிரமர் மோடி, சிறிய தயக்கத்திற்கு பிறகு வணக்கம் புதுச்சேரி என அதை கடந்து சென்றுவிட்டார்.

இதனை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ராகுல், மோடி மீது புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நடுத்தர வர்க்கத்தினரின் சிரமத்தை பற்றி கேட்டால் இது தான் பதில் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு கட்சி நிர்வாகிகளின் கேள்விகளை பா.ஜ.க. ஆய்வு செய்து வருவதாக மறைமுகமாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, கேள்விகளை ஆய்வு செய்வது நல்ல யோசனை என்றும் அதேபோல பதில்களையும் ஆய்வு செய்தால் நல்லது என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

Exit mobile version