ஜனகனமன நாயகன் இரவீந்திரநாத் தாகூர் – பிறந்தநாள் கட்டுரை

உண்மையான நட்பின் ஆழம், பழகிய காலங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பது ரவீந்திரநாத் தாகூரின் நம்பிக்கை. அதேபோல தான் ஆற்றிய பங்களிப்புகளால்தான் கவிஞன் அளக்கபடுகிறானே ஒழிய ஒரு கவிஞனின் வன்மையும் அவன் வாழ்ந்த காலங்களால் நிர்ணயிக்கபடுப்படுவதில்லை.

ஜனகனமன என இந்தியாவின் எந்த மூலையிலிருந்து சத்தம் கேட்டாலும் உறைந்து நின்று நாம் வணக்கம் செலுத்தும் இந்திய தேசியகீதத்தின் தந்தை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் இன்று (மே 7).

தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் (1861-05-09) கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். பிறந்தது என்னவோ மாளிகைதான் என்றாலும் வளர்ந்தது வழக்கம் போல தங்ககூண்டுக்கிளியாகத்தான்.

வழக்கறிஞர் ஆக எண்ணி பள்ளியில் சேர்ந்தார். ஆனால் பாவம் ஷேக்ஸ்பியர் இவரை ஆராய்ச்சியின் பக்கம் இழுத்துவிட்டார். கடைசியில் சட்டமாவது பட்டமாவது எதுவும் பெறாமல் போனபடியே திரும்பி வங்காளம் வந்து சேர்ந்தார்.

வந்த கையோடு 1883ல் மிர்னாலி தேவி என்னும் 10 வயது பெண்ணை (சாரி…பெண் இல்ல குழந்தை..) மணந்தார். 

கலை வாழ்வைப்பொறுத்தவரை விவேகானந்தருக்கு மெட்டமைத்துப்பாட கற்றுக்கொடுத்த இவரை குருதேவ் என்றே உலகம் பின்னாளில் அழைத்தது.

தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, “வால்மீகி பிரபிதா” (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார்.எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார்.இதில் 1910 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே பெங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பு 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இந்திய சொசைடி ஆஃப் லண்டன்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பை மனிதசமுதாயத்தினூடே விளக்கும் பெட்டகமாகப் போற்றப்பட்ட இந்த கீதாஞ்சலிதான் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட) 1913ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசசைப் பெற்றது.

அது 1941ம் ஆண்டு . தன் 80 வது பிறந்தநாளை தானமைத்த கனவுப்பள்ளியான சாந்திநிகேதனில் கொண்டாடினார். அதே ஆண்டு ஆகஸ்ட் 7 தன் கீதாஞ்சலிக் கொள்கைகளை மெய்ப்பிக்கும் விதத்தில் இறைவனடி சேர்ந்தார்,

வங்காளத்தில் இவர் எழுதிய பாடலின் ஐந்து பத்திகளில் முதல் பத்தி மட்டுமே இன்று நாம் பாடும் தேசிய கீதமான ஜனகனமன என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியா மற்றும் வங்கதேசம் என இரண்டு நாடுகளின் தேசியகீதத்தை எழுதிய இரவீந்திரநாத் தாகூரின் நம்பிக்கையைப் போலவே, இயற்கையே இறைவன் என்பதை எல்லோரும் உணருவோமாக.

Exit mobile version