குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கேள்விகளும், பதில்களும் : சிறப்பு தொகுப்பு

என்ஆர்சி எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு, சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், மத்திய அரசே இவை தொடர்பாக அதிகம் கேட்கப்படும் கேள்விகளையும் அவற்றுக்கு பதில்களையும் அளித்து உள்ளது. அது குறித்த சிறப்பு தொகுப்பு.

1.கேள்வி: என்ஆர்சி கணக்கெடுப்பின் போது, இசுலாமியர்களிடம் அவர்கள் இந்தியர்தானா என்பதற்கு ஆதாரங்கள் கேட்கப்படுமா?
 
மக்கள் முதலில் ஒரு முக்கிய தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ஆர்சியை தேசிய அளவில் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. என்ஆர்சி தொடர்பாக எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்புகளையோ, விதிமுறைகளையோ,
நெறிமுறைகளையோ மத்திய அரசு இதுவரை  தயாரிக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியர் என்பதற்கான அடையாளம் கேட்கப்படும் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
 
என்ஆர்சி என்பது ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகளைப் பெறும் நடைமுறையை ஒத்ததுதான். குடியுரிமைப் பதிவேட்டில் உங்கள் பெயரைப் பதிவு செய்து, உங்களுக்கு அரசு வழங்கிய எந்தவிதமான அதிகாரபூர்வ அடையாள அட்டை அல்லது ஆவணங்களைக் காண்பித்து பதியலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையே இதற்குப் போதுமானது.
 
2.கேள்வி: ஒருவர் படிப்பறிவு இல்லாதவராக இருந்து, அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?
 
இதுபோன்ற சூழ்நிலையில், என்ஆர்சி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அந்த அதிகாரி, அந்த நபர் தனக்கு ஆதரவாக உரிய சாட்சியங்களை அழைத்து வர அனுமதிப்பார். அதேசமயம், இவர் இந்தக் கிராமத்தில்தான் வாழ்கிறார் என்பதற்கான வசிப்பிடச் சான்று பெற்று வருவதும் அனுமதிக்கப்படும். இதனால் எந்த இந்தியக் குடிமகனும் துன்புறுத்தலுக்கு ஆளாகமாட்டார்.
 
3.கேள்வி: இந்தியாவில் அதிகமான மக்கள் வீடு இல்லாதவர்களாக, ஏழைகளாக, கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர், அவர்களிடம் எந்த அடையாள அட்டையும் இருக்காது. அந்த மக்களுக்கு என்ன ஆகும்?
 
அந்த மக்கள் கூட தேர்தலில் தங்கள் வாக்கை சில ஆவணங்களின் அடிப்படையில் செலுத்தி இருப்பார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளை ஏதாவது அடிப்படையில் வாங்கியிருப்பார்கள். அந்த அடிப்படையில் அவர்களுக்கான அடையாள அட்டையானது உருவாக்கப்படும்.
 
4.கேள்வி: மூன்றாம் பாலினத்தவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும்
நிலமில்லாதவர்களை என்ஆர்சி விலக்கி வைக்கின்றதா?
 
என்ஆர்சியில் அதுபோன்று எதுவும் இல்லை. என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால், மேலே குறிப்பிட்ட எந்த ஒருபிரிவினரையும் அது பாதிக்காது.
 
5.கேள்வி: என்ஆர்சி கணக்கெடுப்பின் போது கடந்த 1971-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவில் வசிப்பதற்கான ஆவணங்களை அளிக்க வேண்டுமா?
 
இல்லை. இந்த நடைமுறை அசாம் மாநிலத்துக்கு மட்டுமே உள்ளது. அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடத்தப்பட்ட என்ஆர்சி கணக்கெடுப்பில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளது. தேசிய அளவில்  என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் பின்பற்றப்படும் நடைமுறை அசாமில் பின்பற்றப்பட்ட நடைமுறையில் இருந்து முழுமையாக வேறுபடும்.
 
6.கேள்வி: என்ஆர்சி நடைமுறைக்கு வரும்போது, நமது பெற்றோரின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அளித்து குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா?
 
உங்களுடைய பிறந்த நாள், பிறந்த இடம் ஆகிய விவரங்களை வழங்கினாலே போதும். ஒருவேளை, உங்கள் பிறந்த தேதி குறித்த விவரங்கள் இல்லை என்றால்உங்களின் பெற்றோர் குறித்த விவரங்களை வழங்கலாம். ஆனால், பெற்றோர் குறித்த எந்த ஆவணங்களையும் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லை.
 
குடியுரிமையை நிரூபிப்பதற்கு பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான எந்த ஆவணத்தையும் அளிக்கலாம். எந்த வகையான ஆவணத்தை கேட்பது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
 
ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், காப்பீடு ஆவணம், நிலம், வீடு ஆவணங்கள், அதிகாரிகள் வழங்கிய சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்றவை அடையாள ஆவணங்களாகச் சேர்க்கப்படலாம். இந்த ஆவணங்கள் பட்டியல் இன்னும் அதிகரிக்கப்பட உள்ளது, எனவே இந்தியக் குடிமக்கள் எந்த சூழலிலும் பாதிக்கப்படமாட்டார்கள், மக்கள் இதனை எண்ணி கவலைப்படத் தேவையில்லை.
 
7.கேள்வி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த குடிமகனையாவது பாதிக்குமா?
 
குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் வரக் கூடிய இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேறு எந்த நாட்டுக் குடிமகனையும் இந்தியக் குடியுரிமை பெறுவதில் இருந்து தடை செய்யவில்லை. பலூச்சிகள், அகமதியாக்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோர் இந்தியக் குடியுரிமைக்கு எந்த நேரத்திலும் விண்ணப்பிக்க முடியும். அதற்கு அவர்கள் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் கோரப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருப்பது மட்டுமே அவசியம்.
 
8.கேள்வி: என்ஆர்சி நடைமுறையானது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ஒரு பகுதியா?
 
இல்லை, குடியுரிமைச் சட்டம் என்பது தனிச்சட்டம். என்ஆர்சி என்பது தனி நடைமுறை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், முழு இந்தியாவுக்கான என்ஆர்சி கணக்கெடுப்புக்கு உரிய விதிமுறைகள் இன்னும் முடிவாகவில்லை. அசாம் மாநிலத்தில் மட்டுமே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி என்ஆர்சியானது நடைமுறையில் உள்ளது.
 
9.கேள்வி: என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்படத் தேவை உள்ளதா?
 
இந்தியாவில் உள்ள எந்த மதத்தைச் சேர்ந்த குடிமகனும் என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
 
10.கேள்வி: குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கானதா என்ஆர்சி?
 
என்ஆர்சி எந்த மதத்தோடும் தொடர்பில்லாதது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்குமானது. இது குடிமக்கள் பதிவேடு. ஒவ்வொரு இந்தியனும் இந்தப் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
 
11.கேள்வி: அடையாளத்தை நிரூபிப்பது எளிது என்றால், என்ஆர்சி நடைமுறையில் 19 லட்சம் அசாம் மக்கள் ஏன்பாதிக்கப்பட்டார்கள்?

அசாம் மாநிலத்தில் ஊடுருவல் என்பது நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த முயன்றபோதுதான் கடந்த 1985ஆம் ஆண்டில் போராட்டம் வெடித்தது. இதனால் அப்போதைய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊடுருவல்காரர்களை அடையாளம் காண என்ஆர்சி பதிவேடு தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தினால்தான் அசாம் மாநிலத்தில் மட்டும், கடந்த 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம்தேதிக்குள் பிறந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது.
 
12.கேள்வி: எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது குடியுரிமை? குடியுரிமை அரசின் கைகளில்தான் உள்ளதா?
 
’குடியுரிமை விதிகள் 2009’ என்ற விதிகளின் அடிப்படையில்தான் அனைவருக்கும் குடியுரிமை முடிவு செய்யப்படுகிறது. இந்த விதிகள் அனைத்தும் 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் உருவானவை. இந்த விதிகளை அனைவரும் வெளிப்படையாக பார்க்க முடியும். இந்த விதிகளின்படி, எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியக் குடியுரிமை பெற 5 வழிகள் இருக்கின்றன. இந்தியாவில் பிறந்து குடியுரிமை பெறலாம், தனது வம்சாவளியைச் சார்ந்து குடியுரிமை பெறலாம்,பதிவு செய்வதன் மூலம் குடியுரிமை பெறலாம், இயல்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை பெறலாம் அல்லது ஆவணங்கள் அடிப்படையில் குடியுரிமை பெறலாம்.

Exit mobile version