புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுகால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு!

முதலமைச்சர் உத்தரவின்பேரில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று முதல் டிசம்பர் 31 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

முதலமைச்சர் உத்தரவின்பேரில், தாமிரபரணி ஆற்றில் இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் 31ம் தேதி வரை ஆயிரத்து 693 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Exit mobile version