புதுச்சேரி வெங்கட்டா நகரில் நாளை மறுவாக்குப்பதிவு

புதுச்சேரி வெங்கட்டா நகரில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காமராஜர் நகர் வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை விவிபேட் இயந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், இங்கு நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துவங்கவுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. மறுதேர்தலையடுத்து வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுவாக்குப்பதிவையொட்டி, இந்த மையத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காவல்துறையின் கிழக்கு சரகத்தில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version