புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் : உச்சநீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

இவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மத்திய அரசு நியமித்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கு எம்.எல்.எக்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version