வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு!

ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பணியாற்றிய சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கொரோனா காரணமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பும்பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துவர விரும்பும் நிறுவனங்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும், தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version