பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அமைச்சர், ஊராட்சி அளவிலான 10 கூட்டமைப்புகளின் 96 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்து 22 உறுப்பினர்களுக்கு, ஒரு கோடியே 97 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சார்பில் 15 செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, கேட்கும் கருவிகள் மற்றும், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரத்தையும் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version