புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

புரோ கபடி லீக் தொடரின் 31-லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பட்லிபுத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடந்த 31வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. ஆட்டம் தொடங்கியதும் பெங்களூரு வீரர் ரோஹித் குமார் முதல் புள்ளியை தனது அணி பெற்று தந்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி தொடர்ச்சியாக புள்ளிகளை குவித்தது. முதல் பாதி முடிவில், 17 க்கு 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பிறகு தொடங்கிய 2 ஆம் பாதியிலும், பெங்களூரு வீரர்கள் வரிசையாக புள்ளிகளை குவித்தனர். குறிப்பாக பெங்களூரு அணி தெலுங்கு டைட்டன்ஸை 4 முறை ஆல் அவுட் செய்து வெற்றியை எளிதாக்கியது. இரண்டாம் பாதி முடிவிலும், பெங்களூரு 47 க்கு 26 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 3-வது இடத்திற்கு பெங்களூரு புல்ஸ் அணி முன்னேறியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version