இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்யவுள்ள பிரதமர் மோடி, மாநிலம் முழுவதும் தேர்தல் பொதுக் கூட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி தனது வேட்புமனுவை இன்று காலை 11.30 மணியளவில் தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து இரு தினங்களாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கங்கா ஆரத்தி உள்ளிட்டவற்றை மேற்கொண்ட பிரதமர் மோடி முன்னதாக உத்தரபிரதேசத்தின் பாண்டா பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். நலத்திட்டங்கள் தொடர்ந்து மக்களை சென்றடைய பாஜக அரசு மத்தியில் நீடிப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

தொண்டர்கள் சூழ நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதன் மோகன் மாளவியா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மோடி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version