பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம்

காஷ்மீர் பிரச்னை குறித்து பேச தயார் என்று பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 12ஆம் தேதி, கிர்கிஸ்தான் நாட்டில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, அதில் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அதில் பங்கேற்க இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இடையே பேச்சுவார்த்தை நிகழாது என இந்தியா அறிவித்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இந்திய நாட்டின் பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்த இம்ரான்கான், காஷ்மீர் உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி தீர்வு காண தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இருநாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் உரிய பலனளிக்கும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version